செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

திருமண தடை நீக்கும் அர்ச்சுனேஸ்வரர் ஆலய சிறப்பு

தென்னாடுடைய சிவனே போற்றி !!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!


                  பொதுவாக பழங்காலத்து  சிவாலயம் என்றாலே ஊரை விட்டு வெளியே அல்லது ஆத்தங்கரை ஓரமாக தான் அமைந்திருக்கும். அதுபோலவே அமராவதி ஆத்தங்கரையோரம் ஊருக்கு வெளியில் தான் அமைந்திருக்கிறது இந்த அர்ச்சுனேஸ்வரர் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம் :

                 இந்த கோவில், மடத்துக்குளம் (பழனியிலிருந்து கோவை செல்லும் NH 209 சாலை)  என்னும் ஊரில் இருந்து 6 கி.மீ  தூரத்தில் உள்ள கடத்தூர் என்னும் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றின் எழில்மிகு இயற்கை தோற்றத்தின் நடுவே வயல்வெளிகளால் சூழப்பட்டு பரமேஸ்வரன் அர்ச்சுனேஸ்வரராய் காட்சி தருகிறார். 

கோவில் அமைப்பு:

            இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவாலய அமைப்பாக கிழக்கே ஒரு வாயிற்கோபுரமும், தெற்கே ஒரு வாயிலும் உள்ளது. கோவிலின் உள்ளே மிக அரிதாக காணக்கூடிய அமைப்பான சிவனுக்கு வலமாக  சன்னதி அமைந்துள்ளது. சிவன் தேவியை தன்னோடு ஏற்றது இடப்பாகத்தில்தான். ஆனால் இங்கு  வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி அமைந்திருப்பது சிறப்பு.




         கிழக்கு வாசலில் நுழைந்தவுடன் நந்தீஸ்வரர் சிவனை நோக்கி அமர்ந்திருப்பர். அவைரை கடந்து தான் சிவனை காண முடியுமல்லவா. மூலவர் சன்னதியின் தெற்கே தட்சிணாமூர்த்தி பளிங்கு சிலையாக காட்சியளிக்கிறார். சன்னதியின் வலப்பக்கத்தின் பின்னே கிழக்கு நோக்கிய வலம்புரி விநாயகர் அமைந்திருப்பது சிறப்பு. அவரை வணங்கி   நகர்ந்தால், மூலவர் சன்னதிக்கு பின்னல் ஸ்ரீ மகா விஷ்ணு சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

         சன்னதியின் இடப்பக்கத்தின் பின்னே கிழக்கு நோக்கிய சுப்ரமணியர் சன்னதி உள்ளது. ப்ரம்மதேவருக்கு சிலை இல்லை கோபுரத்திலேயே அமைந்துள்ளார். சண்டிகேசுவரர் சிவனை நோக்கி அமர்ந்துள்ளார்.  வடக்கு பார்த்தபடி துர்க்கை சன்னதியும் அமைந்துள்ளது.  

நவகிரகங்கள் அனைத்தும்  இல்லை அனால் சனீஸ்வரர் மட்டும் தனியாக அமர்ந்துள்ளார்.
காலபைரவர் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

            கோமதி அம்மனாக காட்சி அளிக்கும் அம்பாள் சன்னதி முன்பு சுமார் 8 அடி  அளவிலான புற்று உள்ளது.  இந்த புற்று ஆயிரம் ஆண்டுகளாக  வளர்ந்து வருவதாக கல்வெட்டுகள் சொல்கின்றன.




          சிவபெருமான் இங்கு லிங்க  வடிவில் காட்சிதருகிறார். மேலும் சிறப்பாக சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளது. இந்த லிங்கத்திருமேனியின் சிறப்பு, இதன் வளரும் இயல்பு தான் . ஆம் இங்கு உள்ள லிங்கமானது மெதுவாக உயரே வளர்ந்து கொண்டிருக்கிறது.

தல விருட்சமாக மருதமரம் உள்ளது. மூலவருக்கு மருதீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கோவிலுக்கு உள்ளே வில்வ மரமும் காணலாம் 

சிறப்பு:

புரட்டாசி - ஐப்பசி மாதங்களின் சூரிய உதயம்  எதிரே உள்ள அமராவதி ஆற்று நீரில் பட்டு நேர்கோடாக கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழுவது மிகவும் சிறப்பு . 

இக்கோவில் "தென்திருமணஞ்சேரி" என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட நாள் திருமணமாகாதவர்கள், சர்ப்ப தோஷங்களால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு இங்கு ஞாயிறு திங்கள் கிழமைகளில் பரிகாரம் செய்யப்படுகிறது. பரிகாரம் செய்த விரைவில் திருமணம் நிச்சயமாவதை பலர் தங்கள் கைப்பட கடிதம் எழுதி  அனுப்புகிறார்கள். இன்றும் அதில் சில பக்தர்கள் பார்வைக்காக கட்சி பலகையில் வைக்கப்பட்டிருக்கிறது .


இவ்வளவு சிறப்பு மிக்க ஆலயத்தால் ஈர்க்கப்பட்ட பக்தர்களில் நானும் ஒருவன் !!! 



ஓம் நம சிவாய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக